Wednesday, September 18, 2013

வங்கி கடன்... முன்கூட்டியே கட்டினால் நஷ்டமா ? சந்தேகங்கள்...தீர்வுகள் !






 
- இரா.ரூபாவதி, படம்: ஜெ.வேங்கடராஜ்.
 
அவசர தேவைக்காக கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, எப்போது பணம் கிடைக்கும் என்றுதான் காத்திருப்போம். அதே கடனை திரும்பக் கட்டும்போது, கடன் எப்போது முடியும் என்று காத்திருப்பவர்கள் பலர். மாதம் மாதம் இந்த இ.எம்.ஐ.யை கட்டி முடிப்பதற்குள் உயிர் போகிறது என்று புலம்புகிறவர்கள்தான் அதிகம்.
இப்படி புலம்புகிறவர்களில் சிலர், கையில் மொத்தமாக பணம் கிடைக்கும்போது கடனை முன்கூட்டியே கட்டி முடித்துவிடுகிறார்கள். இதனால் சிபில் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்று, உங்களுக்கான மதிப்பெண் குறையும் என சிலர் சொல்லப்போக, முன்கூட்டியே கடன் பணத்தைத் திரும்பக் கட்டியவர்களும், இனி கட்டலாம் என்கிற நினைப்பில் இருந்தவர்களும் கலங்கிப் போயிருக்கிறார்கள். வாங்கிய கடனை முன்கூட்டியே கட்டினால் நஷ்டம் வருமா, வராதா? என இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்னாள் பொது மேலாளர் (ஓய்வு) டாக்டர் எஸ்.இளங்கோவனிடம் கேட்டோம்.
''வங்கியில் தனிநபர் கடன் ஒரு லட்சம் ரூபாயை, மூன்று வருடத்தில் திரும்பச் செலுத்தும் விதமாக ஒருவர் வாங்குகிறார் என வைத்துக்கொள்வோம். இதன் மூலமாக வங்கிக்கு 25 ஆயிரம் ரூபாய் வட்டி வருமானம் கிடைக்கும். கடன் வாங்கிய ஒரு ஆண்டுக்குள் கடனை திரும்பக் கட்டினால் வங்கிக்கு வட்டி வருமானம் இழப்பு ஏற்படும். இ.எம்.ஐ.யை சரிவர கட்ட முடியாததாலேயே கடனை முன்கூட்டியே கட்டினார் என சிபிலில் பதிவாகும் என பலரும் நினைக்கிறார்கள். இது தேவையில்லாத அச்சம்.
ஒருவர் கடனை முன்கூட்டியே கட்ட பல காரணங்கள் இருக்கும். நிலம் விற்று அதன் மூலமாக பெருந்தொகை கிடைத்திருக்கும். பிசினஸ் செய்பவர்களுக்கு வெளியிலிருந்து வரவேண்டிய பணம் வந்திருக்கும். இதுபோன்ற சமயங்களில் இருக்கும் கடனை அடைக்கத்தான் பலரும் முயற்சிப்பார்கள். மேலும், அந்தப் பணத்தை முதலீடு செய்தாலும் குறைவான வட்டியே கிடைக்கும். அதோடு வாங்கிய கடனின் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் என்பதால் பலரும் முன்கூட்டியே கடனை அடைக்க நினைப்பார்கள்.
இப்படி செய்வதால் சிபில் பட்டியலில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. மாறாக, நீங்கள் கடனை விரைவாகச் செலுத்துகிறவர் என்றே சிபிலில் பதிவாகும். இப்படி ப்ரீ-குளோஸ் செய்யும்முன் இ.எம்.ஐ. சரியாக கட்டியிருந்தாலே போதும்.
ஆனால், ஒரு வங்கியில் வாங்கிய கடனை அடைப்பதற்காக வேறு ஒரு வங்கியில் கடன் வாங்கி கடனைக் கட்டினால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் சிபிலில் உங்களுக்கான மதிப்பெண் குறையாது. ஆனால், உங்கள் மீதான மதிப்பீடுகள் மாறிவிடும். இதனாலும் புதிய கடன்களை வங்கி மேலாளர் நிராகரிக்க வாய்ப்பு உள்ளது.
சிபில் என்பது கடன் வாங்கியவரின் கடனைத் திரும்பக் கட்டும் திறனை கணக்கிடும் அளவுகோல்தான். பெரும்பாலான வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன் தரும்முன்  இந்த அளவுகோலை அவசியம் பார்க்கும். இதை மட்டுமே அடிப்படையாக வைத்து கடன் தரப்படுவதில்லை என்றாலும், இதில் ஒருமுறை பதிவான தகவலை மாற்ற முடியாது.  
ஒரே குடும்பத்தில்..!
ஒரு குடும்பத்தில் ஒருவரின் பெயர் சிபில் பட்டியலில் இருந்தால் அதே குடும்பத்தைச் சேர்ந்த இன்னொருவருக்கு கடன் கிடைப்பதில் சிக்கல் வரும் என்றும் சிலர் கவலைப்படுகிறார்கள். புதிய தலைமுறை வங்கிகள் சில இந்தக் கோணத்தில் அணுகுவதாகவும் சிலர் சொல்கிறார்கள். இதுவும் தேவை இல்லாத கவலைதான்.
அதாவது, கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் சூழ்நிலையில் மனைவி தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன் என சில கடன்களை வாங்கி, அதை சரியாகக் கட்டாமல் செட்டில்மென்ட் செய்துள்ளார் என்று வைத்துக் கொள்வோம். பின்னாளில் மகனுக்கு கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்தால் தாயின் சிபில் மதிப்பெண்ணை காரணம் சொல்லி கடனை நிராகரிக்க முடியாது. ஆனால், சில வங்கி மேனேஜர்கள் இதைக் காரணமாகச் சொல்லி கடன் தர மறுப்பதும் உண்மை.
அதேபோல, அதிக தொகை கடனாக கிடைக்கும் என்று நினைத்து இருவர் இணைந்து கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, அதில் ஒருவரின் சிபில் மதிப்பெண் குறைவாக இருந்தால் அந்த கடன் நிகாரிக்கப்படும்.
ஒருவருக்கு கடன் வழங்கும்போது கடன் வாங்குபவரின் திரும்பச் செலுத்தும் திறன், மாத வருமானம், வேலை பார்க்கும் நிறுவனத்தின் துறை வளர்ச்சி, அந்தத் துறையில் இருவருடைய எதிர்கால வளர்ச்சி என்பதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் கடன் கொடுக்கவேண்டும். இதுதான் நடைமுறை. முதல்முறையாக கடன் வாங்குபவருக்கும் இதைப் பின்பற்றவேண்டும்.
அடமானக் கடன்..!
வீடு, நகை என எதையாவது ஒன்றை அடமானமாக வைத்து அவசரச் சூழ்நிலையை சமாளிப்பது நம்மில் பலருக்கு வழக்கம். ஆனால், இந்த கடனை திரும்பச் செலுத்துவதும் சிபில் பட்டியலில் பதிவாகும். இதில் வீட்டை அடமானமாக வைத்து கடன் வாங்கும்போது மாதத் தவணை கட்டும்படி இருக்கும். தவணை கட்டத் தவறினால் சிபில் மதிப்பெண் குறையும். ஆனால், பெரும்பாலான தங்க நகைக் கடன் தவணையில் திரும்பச் செலுத்தும் விதத்தில் இல்லை. மொத்தமாக திரும்பச் செலுத்தலாம் அல்லது நம்மால் முடிந்த அளவு அவ்வப்போது பணம் கட்டலாம். ஆனால், வட்டியை சரியாக கட்டுவது அவசியம். வட்டிக்கு வட்டி கட்டினால் உங்கள் சிபில் மதிப்பெண் குறையலாம்.  
எந்த ஒரு கடன் வாங்கினாலும் அவருடைய பெயர் சிபில் பட்டியலில் சேர்ந்துவிடும். சிபில் பட்டியலில் அவருடைய மதிப்பெண் எவ்வளவு என்பதைதான் வங்கிகள் பார்க்கும். முடிந்தவரை இந்த மதிப்பெண் அதிகம் பெற முயற்சி செய்யுங்கள்'' என்று முடித்தார் இளங்கோவன்.
லோன் செட்டில்மென்ட்..!
கடன் வாங்கி அதை சரியாகக் கட்டாமல் கடைசியில் செட்டில்மென்ட் செய்தால் என்ன மாதிரியான பிரச்னை வரும் என்பதுகுறித்து பேங்க் பஜார் டாட்காமின் சி.இ.ஓ. அதில் ஷெட்டியிடம் கேட்டோம்.
''திடீர் வேலை இழப்பு, அதிக கடன் சுமை, இனி வேலைக்குச் செல்ல முடியாது, உடல்நலக் குறைவு போன்ற காரணத்தினால்தான் பலரும் இ.எம்.ஐ. கட்ட தவறுகிறார்கள். கடன் வாங்கியவரால் கடனை சரிவர கட்ட முடியவில்லை என்ற சூழ்நிலை உருவாகியதும் கொடுத்த கடனை வசூலிக்கத்தான் வங்கி முயற்சிக்கும். தொடர்ந்து போன் செய்து, வீட்டிற்கு ஆள் அனுப்பிகூட கடனாக தந்த பணத்தை திரும்ப பெற முயற்சிக்கும். இம்முயற்சி தோல்வி அடைந்து, இனி கடனாக தந்த பணம்  திரும்ப வராது என்ற சூழ்நிலையில்தான் வங்கி செட்டில்மென்டிற்கு போகும்.
செட்டில்மென்ட் முடிவுக்கு வருவதற்குள் வங்கி உங்களை ஒருவழி ஆக்கிவிடும். கொடுத்த கடன் தொகை வாங்க இதுதான் வழி என வங்கி நினைக்கும்போதுதான் செட்டில்மென்டிற்கு ஒப்புக்கொள்ளும். இதுபோன்ற சமயத்தில் கடன் வாங்கியவருடன் வங்கி பேச்சுவார்த்தை நடத்தும். அப்போது கடன் வாங்கியவர் கட்டவேண்டிய அசல், அதற்கான வட்டி என எல்லாவற்றையும் சேர்த்து ஒரு தொகையைக் கேட்கும். இதில் பெரும்பாலானவர்கள் முடிந்தவரை தங்கள் பேச்சுத் திறமையைப் பயன்படுத்தி தொகையைக் குறைத்துவிடுவார்கள். இதில் சில சமயங்களின் கடன் வாங்கிய அசல் தொகையைவிட குறைவான தொகைக்குகூட சென்ட்டில்மென்ட் செய்ய வங்கி ஒப்புக்கொள்ளும். இந்த சமயத்தில் கடன் வாங்கியவரும் பெருமையாக வாங்கிய கடனைவிட குறைவான தொகையே கட்டினேன் என்று பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.
செட்டில்மென்ட் பணம் தந்தபிறகு செட்டில்மென்ட் கடிதம், பணம் கட்டியதற்கான ரசீது ஆகியவற்றை வாங்கி வைத்துக்கொள்வது அவசியம். இது எதிர்காலத்தில் தேவைப்படும். இந்தக் கடிதத்தில்தான் வங்கி தனது வேலையை புத்திசாலித்தனமாக சரியாகச் செய்யும். உங்களுக்கு கொடுக்கும் செட்டில்மென்ட் கடிதத்தில் வாங்கிய கடன் தொகையைவிட குறைவான தொகையே திரும்பச் செலுத்தி இருக்கிறீர்கள் என்பதைத் தெளிவாக சொல்லி விடும். இந்த தகவல் அப்படியே சிபில் ரிப்போர்ட்டில் பதிவாகிவிடும். இதில் நீங்கள் தனிநபர் கடன் வாங்கி செட்டில்மென்ட் செய்திருந்தால், உங்களின் சிபில் மதிப்பெண் குறைந்துவிடும். பிற்பாடு வீட்டுக் கடன் கேட்டு வேறு வங்கியில் விண்ணப்பிக்கும் போது, உங்களின் விண்ணப்பத்தை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது. இதையும் மீறி தரப்படும் கடனுக்கு வட்டி விகிதம் சற்று அதிகமாக இருக்கும். அதோடு கடனுக்கு ஒருவர் ஜாமீன் கையெழுத்து போடவேண்டும் என்றும், கடன் தொகைக்கு ஈடான இன்ஷூரன்ஸ் பாலிசிகள், ஃபிக்ஸட் டெபாசிட் போன்றவற்றின் பத்திரத்தை வங்கியில் ஒப்படைக்கும் சூழ்நிலை உருவாகும்.
எனவே, மீதமுள்ள கடனுக்கான வட்டி அதிகம் என்றாலும் பரவாயில்லை. வங்கி கேட்கும் தொகை முழுவதையும் செலுத்த முயற்சி செய்யுங்கள்.
 சில ஆயிரங்களை மிச்சப்படுத்துவதாக நினைத்து எதிர்காலத்தில் கடன் பெறும் வாய்ப்பை இழந்து விடாதீர்கள்'' என்றார். 
ஆக கடன் வாங்குபவர்கள் கவனமாக இருப்பது அவசியம்!


1 comment:

  1. ஆக கடன் வாங்குபவர்கள் கவனமாக இருப்பது அவசியம்!

    ReplyDelete