Sunday, June 10, 2012

தாமதமாக தகவல் அளித்த வங்கி அதிகாரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்!



ஒன்இந்தியா :சனிக்கிழமை, ஜூன் 9, 2012, 14:41
சென்னை: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரம் கேட்ட நபருக்கு தாமதமாக தகவல் அளித்த வங்கி மேலாளருக்கு மத்திய தகவல் ஆணையம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
சென்னை பெசன்ட் நகரை சேர்ந்தவர் ரஞ்சி ஆனந்தன். இவர் சென்னை எத்திராஜ் சாலையில் உள்ள ஒரு வங்கியில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில தகவல்களை கேட்டு கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அவரது மனுவிற்கு வங்கியில் இருந்து எந்த பதிலும் அளிக்கவில்லை.
இதையடுத்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி, வங்கியின் செயல் இயக்குநரிடம் ரஞ்சி ஆனந்தன் அப்பீல் செய்தார். ஆனால் அவரும் தகவல் வழங்கும்படி பொது தகவல் அதிகாரிக்கு உத்தரவிடவில்லை.
இந்த நிலையில் வங்கியின் பொது தகவல் அதிகாரியான பாலசுப்ரமணியத்துக்கு எதிராக மத்திய தகவல் ஆணையத்தில் ரஞ்சி ஆனந்தன் புகார் செய்தார்.
இவரது புகார் மனுவை விசாரித்த மத்திய தகவல் ஆணையம்,
மனுதாரர் ரஞ்சி ஆனந்தன், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் 2011 செப்டம்பர் 19ம் தேதி விண்ணப்பித்து உள்ளார். அவருக்கு 2011 அக்டோபர் 19ம் தேதி தகவல் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் 2012 மே 18ம் தேதி தான் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
எனவே பொது தகவல் அதிகாரி பாலசுப்பிரமணியம் தகவலை 100 நாட்களுக்கு மேல் காலதாமதமாக வழங்கி உள்ளார். தகவல் பெறும் உரிமை சட்டம் பிரிவு 20(1) ன் படி காலதாமதமாக தகவல் வழங்கியதற்காக வங்கி அதிகாரி பாலசுப்ரமணியத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இத்தொகையை அவரது சம்பளத்தில் இருந்து வங்கி நிர்வாகம் பிடித்தம் செய்ய வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.