Friday, October 5, 2012

மதுரை மல்லிகைக்கு "புவிசார் குறியீடு': மலருக்கு கிடைத்த, "முதல் மரியாதை'



தினமலர் :அக்டோபர் 05,2012,00:14 IST



மதுரை: ""உலகளவில் தனித்துவம் வாய்ந்தது மதுரை மல்லிகை என்பதைக் குறிக்கும் வகையில், "புவிசார் குறியீடு' (ஜி.ஐ.,) கிடைத்துள்ளது,'' என, மதுரை விவசாயக் கல்லூரி டீன் வைரவன் தெரிவித்தார்.

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களை உள்ளடக்கிய, "பழைய மதுரையின்' மண்வளம், மல்லிகைக்கு ஏற்றது. இந்த மண்ணில் விளையும் மல்லிகைக்கு மட்டும் கூடுதல் மணம், வெண்மை உண்டு.

 இரண்டு நாட்கள் வரை பூக்கள் வாடமல் நன்றாக இருக்கும். பூவின் காம்பும், இதழ்களும் சம உயரத்தில் இருக்கும். மதுரை மல்லி வாசம் என்றே சிறப்புடன் காலம் காலமாக போற்றப்படுவதே, மதுரை மல்லிகைக்கு சிறப்பு.

தமிழகத்தின் பல இடங்களில், பரவலாக மல்லிகைப் பூக்கள் விளைந்தாலும், மதுரையின் சிறப்பு வேறிடத்தில் இல்லை. மதுரை மார்க்கெட்டிற்கு மட்டும் பிப்ரவரி, ஏப்ரல் மாதங்களில் 15 முதல் 20 டன் பூக்கள் வரத்து இருக்கும். நவம்பர், டிசம்பரில் வேறெங்கும் பூக்கள் உற்பத்தி இருக்காது; மதுரையில் மட்டும் குறைந்தளவு உற்பத்தி இருக்கும்.

இந்த சிறப்புகளுக்காக, மதுரை மல்லிகைக்கு "புவிசார் குறியீடு' கிடைத்துள்ளது. நாட்டில் ஒரு பூவிற்கு "புவிசார் குறியீடு' கிடைத்தது, இதுவே முதல்முறை.