Monday, August 19, 2013

பத்து மணி வரை மௌன விரதம்...மீண்டும் ஆரம்பம் .





SriRam :19 Aug 2013

க்ளிங் க்ளிங்... க்ளிங் க்ளிங்...
ஹரிஓம்! யாருங்க பேசுறது..

என்ன ஸ்ரீராம்... தூக்கமா? மணி 7 தானே ஆகுது.. நீ இன்னும் எந்திச்சிருக்க மாட்டேன்னு தெரியும்! இருந்தாலும் நீ எழுந்துட்டியா என்னன்னு பாத்தேன்!
... சரி சார்.. என்ன விஷயம் சொல்லுங்க.. இந்த சத்தம் கேட்டுதான் எழுந்தேன்....

ஓ.. அப்படியா... சரி சரி... நீ எழுந்து பல் தேச்சுட்டு காபி குடிச்சிட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு... அப்புறம் பேசறேன்!
சரிங்க....

(அப்புறம் பேசினாலும் என்னத்த பேசப் போறாரு..? வெட்டிக் கதைக்கு நேரம் காலம் இருக்கா என்ன?)

மனசுக்குள் நினைத்துக் கொண்டேன். 

இப்படி போன் செய்து எழுப்பியவர் ஒரு முக்கியப் புள்ளி. எதையெல்லாம்தான் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது இந்த நாட்டில்! ச்சும்மா.. டெஸ்ட் பண்றாராமாம்.. நான் தூங்கிக்கிட்டிருக்கேனா... இல்லே... முழிக்கிட்டேனான்னு?! 

பெரும்பாலும் இந்த மாதிரியான அனுபவம் பலருக்கும் இருக்கும். கேண்டீனில் சாப்பிட்டிருக்கும்போதுதான்.. என்ன சாப்பிட வந்தீங்களாங்கறது.. அதை விட கேனத்தனமான கேள்வி ... என்ன சார்...கேண்டீனுக்கு வந்தீங்களா?ங்கறது.. 

என்னமோ கேக்கணுமேன்னு இப்படி கேள்விகளைக் கேட்பது அபத்தம்தான். பேச்சைத் தொடங்க வேண்டும்.. அல்லது சுமுகமான உறவை வளர்க்க வேண்டும்... உண்மைதான்! அதற்காக இப்படியா? 

ஒரு புன்முறுவல் போதுமே! பற்களை வெளிக் காட்டி டூத்பேஸ்ட் விளம்பரம் கணக்காக இளிக்காவிட்டாலும், உதட்டை லேசாக சந்திரன் பிறைபோல் வளைத்து, கண் இமைகளைச் சற்றே சுருக்கி, கன்னங்களில் சிறு சதை குவிய முகத்தில் உற்சாகப் பூ மலர ஒரு கனிவான பார்வை பார்த்தாலே போதுமே! நடப்பு நட்பு மலர மாற்றாதா?

எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் ஒருவர் இருந்தார். பழந்தமிழகத்தின் வட எல்லையில் வாசம் செய்யும் சாமியின் பெயர் கொண்டவர். எக்ஸ்பிரஸ் வளாகத்தில் கேரள மக்களின் நடமாட்டம் சற்றே அதிகம்தான்! இவருக்கு அவர்களிடம் எதையாவது கேட்டு சுமுக உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம். ஒரு பெரிய தலையிடம் கேட்டார்... "எந்தா சாரே... ஊனு கழிச்சோ?”

தலையில் அடித்துக் கொண்டே அந்த நண்பரும் ஹி.. ஹி.. என்று நகர்ந்தார்.
காரணம் அவர் கேள்வி கேட்ட இடம்..! ரெஸ்ட் ரூம் என்றும் பாத்ரூம் என்றும் நாகரிக வார்த்தைகளில் சொல்லிக் கொள்ளும் கழிவறை!

இதே போன்ற அனுபவத்தைக் கொண்டிருந்த ஒருவரின் பேச்சு இன்று காலை எனக்கு இந்தச் சிந்தனையைத் தூண்டியது. அவர் நம் நண்பர் திருப்பூர் கிருஷ்ணன். அமுதசுரபி இதழாசிரியர். 

காலையில் கைபேசியில் அழைத்தேன். எடுக்கவில்லை. விட்டுவிட்டேன். பத்து மணி சுமாருக்கு என் கைபேசிக்கு அழைப்பு வந்தது. பேசினேன். அவரே எடுக்காததன் காரணத்தைச் சொன்னார். பத்து மணி வரை மௌன விரதமாம்! தொடர்ந்து யாரேனும் அழைப்பு விடுத்து... பேசிப் பேசி... மற்ற காலை நேரக் கடன்களைக்கூட ஒழுங்காகச் செய்ய முடியாதபடிக்கு அவர் நேரத்தை இவர்கள் நிர்வகித்து விடுகின்றனராம். அதற்காக அவர் கண்டறிந்த வழி இந்த காலை நேர மௌனவிரதம்!

இதை அவர் இப்படியாக தொலைபேசியில் அழைத்த ஒருவரிடம் சொல்லப் போக, அந்த நபரும் கர்மசிரத்தையாக அவருடைய சிற்றிதழில் பிரசுரித்துவிட.... 

ஒரு நாள் ஒரு பெரும்புள்ளி... நீண்ட நேரம் விடாமல் கைபேசியில் அழைத்துக் கொண்டே இருந்தாராம்! இவரும் பொறுமையாக இருந்துவிட்டு, பத்துமணிக்கு மேல் அந்த நபரை அழைத்து, ஐயா... என்ன அவசரமான செய்தி ஏதேனும் உள்ளதா? என்று கேட்டாராம்.

அதற்கு அந்த நபர் சொன்னாராம்... இல்லே... ஒரு துணுக்கு படிச்சேன். அதில் போட்டிருக்கபடிதான் நீங்க பத்து மணி வரை மௌன விரதம் இருக்கீங்களான்னு ச்சும்மா செக் பண்ணேன்...! 

அட பாருங்க... எப்டில்லாம் ஒரு செய்தியை குறுக்கு விசாரணையும் தீவிர விசாரணையும் செய்து, உறுதிப் படுத்திக்கிறாங்கப்பான்னு தோன்றியது!!! 

நீங்களும் இதைப் படித்துவிட்டு, திருப்பூர் கிருஷ்ணன் சார்வாளின் செல்லுக்கு சிணுங்கல் கொடுத்து வீட்லே சிணுங்க விட்டுடாதீங்க நண்பர்களே!

பின்குறிப்பு  :.by bank finance india

நானும் ஒரு  வருடத்திற்கு முன் காலை பத்துமணிவரை  மௌனவிரதத்தை 

கடைப்பிடித்து பின்  வழக்கம்போல் தொலைபேசி அழைப்புக்களை எடுக்க 

ஆரம்பித்தேன்  நாளை முதல்  பத்துமணி வரை மௌனவிரதத்தை மீண்டும் 

துவக்குகிறேன் .

.தற்போது எனக்கு வரும் அனைத்து  அழைப்புகளையும்  எடுத்து 

பேசுகிறேன் .ஆனால்  எவரையும்  நானாக  அழைத்து  பேசுவதை  முற்றிலும்

தவிர்க்கிறேன் ...ஒருசில முக்கிய  அழைப்புகளை தவிர ..

No comments:

Post a Comment