Monday, October 29, 2012

பரஸ்பர நிதியங்கள் 16 லட்சம் கணக்குகளை இழந்தன






தினமலர் திங்கள் ,அக்டோபர்,29, 2012

மும்பை : பரஸ்பர நிதி நிறுவனங்கள், சென்ற செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில், 16 லட்சம் கணக்குகளை இழந்துள்ளன. பங்குச் சந்தையின் ஏற்ற, தாழ்வு தான் இதற்கு காரணம் என, இந்திய பரஸ்பர நிதியங்கள் கூட்டமைப்பு (ஆம்பி)தெரிவித்துள்ளது.நடப்பாண்டில், சென்ற மார்ச் இறுதி நிலவரப்படி, உள்நாட்டில் உள்ள, பரஸ்பர நிதியங்களிடம் 4.64 கோடி கணக்குகள் இருந்தன. இந்த எண்ணிக்கை, நடப்பு 2012 - 13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், 3.5 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 4.48 கோடியாக குறைந்துள்ளது.சில்லரை முதலீட்டாளர்கள்குறிப்பாக, மதிப்பீட்டு காலத்தில்,சில்லரை முதலீட்டாளர் பிரிவில் அதிக அளவிற்கு கணக்குகள் முடிக்கப்பட்டு உள்ளன. இவற்றில், பெரும்பாலானவை பங்கு சார்ந்த முதலீட்டு திட்டங்களாகும்.

இவ்வகை முதலீட்டு திட்டங்களில் இருந்து, 6,341 கோடி ரூபாயை முதலீட்டாளர்கள் திரும்ப பெற்றுள்ளனர். அதே சமயம், இதே காலத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்' 7 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட முதலீட்டாளர்கள், லாபநோக்கம் கருதி, தங்கள் கணக்கை முடித்து, முதலீட்டை திரும்ப பெற்றுள்ளனர்.குறிப்பாக, பங்குச் சந்தை ஏற்றம் கண்ட செப்டம்பர் மாதத்தில், அதிக அளவிலான முதலீட்டு கணக்குகள் முடிக்கப்பட்டுள்ளன.

அதே சமயம், பங்குச் சந்தை மேலும் ஏற்றம் காணும் என்ற எதிர்பார்ப்பில், 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட சில்லரை முதலீட்டாளர்கள், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்ட கணக்கை முடிக்காமல், தொடர்ந்து பராமரித்து வருகின்றனர்.பரஸ்பர நிதியங்களின், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில், சில்லரை முதலீட்டாளர்கள், 1.40 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்து உள்ளனர்.இதில், 85 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக முடிக்கப்படாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு நேர்மாறாக, 5 லட்ச ரூபாய்க்கு மேலாக முதலீடு செய்த, அதிக சொத்து மதிப்புள்ள தனி நபர் கணக்குகளில், 60 சதவீதத்திற்கும் மேலாக முடிக்கப்பட்டு உள்ளன.பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில், சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பு குறைந்து வரும் நிலையில், கடன் பத்திரங்கள் சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில், அவர்களின் முதலீடு அதிகரித்து வருகிறது.மதிப்பீட்டிற்கு எடுத்துக் கொண்ட ஆறு மாத காலத்தில், "கில்ட்' "லிக்யுட்' உள்ளிட்ட கடன் பத்திரங்களில், சில்லரை முதலீட்டாளர்களின் கணக்கு, 10.5 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு, பங்குச் சந்தையின்ஏற்றத் தாழ்வை கண்ட சில்லரை முதலீட்டாளர்கள், கடன்பத்திரங்கள் தான் பாதுகாப்பானவை என, முடிவு செய்து அவற்றில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், இப்பிரிவிலான சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என, பரஸ்பர நிதி ஆலோசகர் ஒருவர் தெரிவித்தார்.பரஸ்பர நிதியங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பில், கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடர்ந்து முதலிடத்தை வகித்து வருகின்றன. எனினும், மதிப்பீட்டு காலத்தில், இவற்றின் பங்களிப்பு, 46 சதவீதத்தில் இருந்து, 43 சதவீதமாக குறைந்துள்ளது.பரஸ்பர நிதியங்கள், கடன் பத்திரமுதலீடு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களின் கீழ் நிர்வகிக்கும் சொத்து மதிப்பில், கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு 60 சதவீதமாக உள்ளது.
 அதிக சொத்து மதிப்பு கொண்ட தனி நபர் மற்றும்சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பு, முறையே 25 மற்றும்

23 சதவீதமாக உள்ளது.சென்ற மார்ச் இறுதி நிலவரப்படி, இந்த இரு பிரிவுகளின் பங்களிப்பு தலா, 27 சதவீதமாக இருந்தது.சென்ற ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், பரஸ்பர நிதியங்கள் நிர்வகித்து வந்த பரஸ்பர நிதி திட்டங்களின் சொத்து மதிப்பு, 7.22 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment