Wednesday, September 24, 2014

வரலாற்று சாதனை! முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பி வெற்றி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது

)







: 07:56 (24/09/2014

பெங்களூர்: மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, அது வண்ணப் புகைப்படங்களை எடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி தனது பணியை துவங்கியுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆராய ‘மங்கள்யான்’ விண்கலம் உருவாக்கப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. ரூ.460 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம் 300 நாட்களுக்கும் அதிகமாக விண்ணில் பயணம் செய்து திட்டமிட்டப்படி இன்று காலை செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையை அடைந்தது.

அப்போது அதில் உள்ள லாம் என்ஜின் மற்றும் அதனுடன் பொருத்தப்பட்டுள்ள 8 சிறிய என்ஜின்கள் 24 நிமிடங்கள் எரியூட்டப்பட்டு அதன் வேகத்தை குறைத்து செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த அரிய நிகழ்வை பெங்களூர் பீனியாவில் உள்ள இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து பிரதமர் நரேந்திரமோடி நேரில் பார்வையிட்டார்.

இந்த திட்டத்தின் வெற்றி மூலம், முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பி வெற்றி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது.
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உரை நிகழ்த்தியபோது, ''மங்கள்யான் வெற்றியடையும் என முழு நம்பிக்கை இருந்தது. விண்வெளியில் இந்திய விஞ்ஞானிகள் வரலாற்று சாதனை படைத்துள்ளனர். சாதிக்க முடியாததை இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதித்துள்ளனர். அனைத்து இந்தியர்களும் பெருமைப்பட வேண்டிய தருணம் இது.
கோடிக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மங்கள்யான் சாதனை படைத்துள்ளது. முதல் முயற்சியிலேயே வெற்றி எட்டப்பட்டிருக்கிறது. முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற முதல் நாடு இந்தியா. முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தி இருக்கிறார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள். விண்வெளித் திட்ட சாதனைகளுக்கு இது ஒரு அடையாளம்.
வருங்கால சந்ததியினருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிகாட்டி இருக்கிறார்கள். தெரியாத ஒன்றை ஆய்வு செய்ய நம் விஞ்ஞானிகளைவிட வேறு யாருக்கும் ஆர்வம் இல்லை " என்று பாராட்டினார்.
பணியை துவக்கியது மங்கள்யான்
இதனிடையே செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள மங்கள்யான் செயற்கைக்கோள், வண்ணப் புகைப்படங்களை எடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்ப துவங்கியுள்ளது. இந்த போட்டோக்கள், இன்று மாலை வெளியிடப்பட உள்ளதாக இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறை அதிகாரி பிச்சைமணி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment