Tuesday, April 24, 2012

இந்தியா உட்பட பல நாடுகளில் 200க்கும் மேற்பட்ட ஜிம்களை துவக்க டோணி புது திட்டம்!


MS Dhoni
திங்கள்கிழமை, ஏப்ரல் 23, 2012,

டெல்லி: இந்தியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட உலகின் பல நாடுகளில் 200க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி கூடங்களை (ஜிம்கள்) துவக்க இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி திட்டமிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி உலக கோப்பையை பெற்று தந்து புகழின் உச்சிக்கு சென்றவர். கிரிக்கெட் ஆடுகளத்தில் அணியின் நிலவரத்திற்கு ஏற்ப பேட்டிங்கில் கலக்கும் திறன் கொண்ட டோணிக்கு, இந்தியா மட்டுமின்றி உலகம் எங்கும் ரசிகர்கள் உண்டு.

இதனால் பிரபல நிறுவனங்களான ஏர்செல், கோத்ரேஜ், ரிபோக் உட்பட 25 நிறுவனங்களின் விளம்பரங்களில் தோன்றி கோடிக்கணக்கில் சம்பளம் பெற்று வருகிறார். இந்த நிலையில் டோணிக்கு அதிகம் ரசிகர்கள் உள்ள இந்தியா உட்பட பல நாடுகளில் சகல வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடங்களை அமைக்க டோணி திட்டமிட்டுள்ளார்.

இதற்காக ஸ்போர்ட்ஸ் பிட் வோல்டு பிரைவேட் லிமிடேட் என்ற நிறுவனத்தை துவக்கி உள்ளார். இதற்காக வர்த்தக மேலாளர் அருண் பாண்டே என்பவருடன் கைகோர்த்து புதிய வர்த்தகத்தில் களமிறங்கி உள்ளார்.

இது குறித்து ரித்தி ஸ்போர்ட்ஸ் மேலாண்மை நிர்வாகி அருண் பாண்டே கூறியதாவது

வரும் மே மாதம் முதல்கட்டமாக 4 உடற்பயிற்சி கூடங்கள் துவக்கப்படும். அதன்பிறகு டோணிக்கு அதிக ரசிகர்கள் உள்ள இந்தியா உட்பட உலகின் பல நாடுகளுக்கு உடற்பயிற்சி கூடங்கள் விரிவுப்படுத்தப்படும்.
  
இத்திட்டத்திற்காக அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.2,000 கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிதியை அளிக்க பல முன்னணி வங்கிகளும் முன் வந்துள்ளன. மேலும் பலத்தரப்பினரும் இத்திட்டத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அடுத்த மாதம் (மே) இந்தியாவில் முதல்கட்டமாக குர்கான், டெல்லி, சண்டிகர், பரீதாபாத் ஆகிய 4 இடங்களில் உடற்பயிற்சி கூடங்கள் துவக்கப்பட்டு, ஸ்போர்ட்ஸ்பிட் வோல்டு நிறுவனம் மூலம் பராமரிக்கப்படும். வெளிநாடுகளில் உடற்பயிற்சி கூடங்கள் துவங்குவது குறித்து துவக்க விழாவில் அறிவிக்கப்படும் என்றார்

No comments:

Post a Comment